நடிகர் ஜெய்யுடன் காதல் தோல்வியா? -அஞ்சலி விளக்கம்


நடிகர் ஜெய்யுடன் காதல் தோல்வியா?   -அஞ்சலி விளக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 6:54 PM GMT)

நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்ததாகவும் தற்போது காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் திரையுலகினர் பேசி வருகிறார்கள்.

ஐதராபாத்தில் அஞ்சலி அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- உங்கள் காதல் தோல்வி பற்றி சொல்லுங்கள்?

பதில்:- எனக்கு காதலே இல்லை. அப்புறம் எப்படி தோல்வி இருக்கும். ஜெய் என்னுடையை நெருங்கிய நண்பர். நாங்கள் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் எல்லோரும் பேசினர். இப்போது பிரிந்து விட்டோம் என்றும் கற்பனை கதைகளை விடுகிறார்கள். இதில் இம்மியளவும் உண்மை இல்லை.

ஒரு ஹீரோவுடன் சேர்ந்து ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் அவரை காதலிப்பதாக அர்த்தமா? நாங்கள் காதலிப்பதாக ஒரு தயாரிப்பாளர் விழாவொன்றில் பேசி இருக்கிறார். எங்கள் நட்பை தவறாக புரிந்து அப்படி பேசி உள்ளார். அது அவரது கருத்து. யார் என்ன நினைத்தாலும் எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டும்தான்

கேள்வி:- திருமணம் எப்போது செய்து கொள்வீர்கள்?

பதில்:- கைவசம் படங்கள் வைத்து ஓய்வில்லாமல் நடிக்கிறேன். திருமணம் பற்றி யோசிக்க நேரம் இல்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை. திருமணம் முடிவானதும் எல்லோருக்கும் சொல்வேன்.

கேள்வி:- நீங்கள் நடித்ததில் பிடித்த படங்கள்?

பதில்:- எல்லா படங்களுமே பிடிக்கும். கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரங்களோடு வாழ்ந்தேன்.

கேள்வி:- உங்களை வருத்தப்படுத்திய சம்பவம் எது?

பதில்:- எனது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை நிறைய பேர் ஊதி ஊதி பெரிதுபடுத்தினார்கள். ஆறுதல் சொன்னவர்களை விட விமர்சனத்துக்கு தூபம் போட்டவர்கள்தான் அதிகம். அது என்னை சங்கடப்படுத்தியது.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.

Next Story