சிக்கலில் ஜி.வி.பிரகாசின் ‘ஜெயில்’ படம்
சில சிக்கல்கள் காரணமாக ஜி.வி.பிரகாசின் ‘ஜெயில்’ படம் திட்டமிட்டபடி திரைக்கு வராமல் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
தமிழில் வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஜெயில் படத்தை இயக்கி உள்ளார். கிரிகிஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிந்து விட்டது. படத்தை பார்த்தவர்கள் சிறப்பாக வந்துள்ளது என்றும், சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என்றும் பாரட்டி உள்ளனர். படத்தில் ஜி.வி.பிரகாசின் பின்னணி இசையும் பேசப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் திரைக்கு வரவில்லை.
கடந்த வருடமே திரைக்கு வரும் என்று எதிர்பார்த்தும் வரவில்லை. சில சிக்கல்கள் காரணமாக படம் திட்டமிட்டபடி திரைக்கு வராமல் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டார். அதில் “ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறதுக்கு தலைகீழா நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கணும். படப்பிடிப்பு தடையின்றி நடக்க கையில அக்னிசட்டியோட கயித்துல நடக்கணும். இது எல்லாவற்றையும் கூட தாங்கிடலாம். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story