இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி : கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி - வைரமுத்து


இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி : கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி - வைரமுத்து
x
தினத்தந்தி 20 Feb 2020 9:03 AM GMT (Updated: 20 Feb 2020 9:03 AM GMT)

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசேஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  பின்னர் தனியார் மருத்துவமனை சென்ற கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று நலம் விசாரித்தனர். 

இந்த சம்பவம் குறித்து திரைத்துறையினர் பலரும் தங்கள் இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

அதில்,கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.கண்ணீரையும் மனிதத் தவறுகளையும் ஒருசேரத் துடைத்துக் கொள்வோம்;வலியோடு பயணிப்பதே வாழ்வு.வருந்துகிறேன்.

எனக் கூறியுள்ளார்.

Next Story