ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்


ஹாலிவுட் கதாநாயகர்கள்  : சோபியா லோரன்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:24 AM GMT (Updated: 21 Feb 2020 10:24 AM GMT)

ஹாலிவுட் பட உலகில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில், சோபியா லோரன் மிகவும் முக்கியமானவர். இவரது வசீகரமான அழகு, அனைவரின் கண்களையும் கவர்ந்தது. இந்த நடிகைக்கு முன்னோடியாக பலர் இருந்தாலும், இவரையும் அந்த வரிசையில் இணைத்தனர், ஹாலிவுட் பட உலகினர்.

இத்தாலியின் ரோம் நகரில், 1934-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி பிறந்தவர், சோபியா லோரன். இவரது தந்தை, தன்னை ஒரு கட்டிட என்ஜினீயர் என்று சொல்லிக் கொண்டாலும், அவரது மனமெல்லாம் நாடக மேடையின் பக்கமே இருந்தது. அது நடிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல.. நாடகத்தில் நடிக்க வரும் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர வேண்டும். அவர்களுடன் காதல் களியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்ற காரணத்தால்தான்.

அவரது வலையில் ரோமில்டா வில்லனி என்ற இளம் நடிகை சிக்கிக் கொண்டார். “உன் முகத்தில் நடிகை கிரட்டா கார்ப்போ சாயல் உள்ளது” என்று கதைவிட்டார். அதை நம்பிய ரோமில்டா வில்லனி, அமெரிக்கா சென்று, அந்த பிரபல நடிகைக்கு ‘டூப்’ நடிகையாக நடித்து புகழ்பெறலாம் என்று நினைத்தார். ஆனால் இத்தாலியைத் தாண்டக்கூடாது என்று வில்லனியை அவரது தாய் கண்டித்ததால், வேறு வழியின்றி தன்னையே சுற்றி சுற்றி வந்த கட்டிட என்ஜினீயரை மணந்து கொண்டார். அந்த கட்டிட என்ஜினீயர்தான், சோபியா லோரனின் தந்தை. அவரது பெயர், ரிகார்டோ சிசிகோலினி.

தனக்கு மகள் பிறந்தவுடன் வில்லனி, தனது சொந்த ஊருக்கு குழந்தையுடன் சென்றார். அவருக்கு ரிகார்டோ மூலம் இன்னொரு குழந்தை பிறந்தது. ஆனால் சில காலத்திலேயே வில்லனியை விட்டு விட்டு, ரிகார்டோ வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார்.

சோபியா, பிறந்த நேரத்தில் அங்கு இருந்த நர்ஸ், “இவ்வளவு மோசமான அழகில்லாத குழந்தையை, என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை” என்றாள். அப்படி இகழப்பட்ட சோபியா லோரன் தான் பிற்காலத்தில் மிகச் சிறந்த அழகி என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

அதிர்ந்து கூட பேசாமல், அமைதியான சிறுமியாக வளர்ந்த சோபியா லோரன், இளம் வயதில் எவ்வளவு வறுமையில் வாடினார் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. தன் தாய் வழி சொந்தக் காரர்கள் மற்றும் பாட்டி, தாத்தா வீட்டில் மாறி மாறி வளர்ந்தார். எட்டு பேர் படுக்கக்கூடிய ஒரு படுக்கை அறையில் சோபியாவும் ஒரு மூலையில் தூங்கினார். இந்த சாதாரண நிலைகூட ஒரு கட்டத்தில் மிகவும் மோசமான நிலையை எட்டியது.

அதுதான் உலக யுத்தம் நடைபெற்ற நேரம். அந்த நேரத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தால், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது சோபியாவின் குடும்பம். சோபியாவின் தாய் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் மோட்டார் ரேடியேட்டரில் தண்ணீர் பிடித்து ஆளுக்கு கொஞ்சமாகக் கொடுத்து உயிர் வாழ வைத்தார். உலகத்தில் எந்த நடிகையும் இவ்வளவு சிரமங்களை இளம் வயதில் அனுபவித்து இருக்க மாட்டார்கள். யுத்தத்தின் போது ஒரு குண்டு வெடிப்பில் சிக்கிய லோரனின் தாடையில் பெரிய கிழிசல் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் கவலைப்படும் நிலையில் இல்லை.

பள்ளி பருவத்தில் சோபியா மிகவும் ஒல்லியாக இருந்தார். அவரது உருவத்தை சக தோழிகள் ஏளனம் செய்வார்கள். 14 வயதில் சேபியா லோரன், பூப்பெய்தினார். அந்த நாளில் இருந்து அவள் உடலில் ஏற்பட்ட மாறுதல் அனைவரையும் வியக்க வைத்தது. அழகு நிறைந்த ஒரு கவர்ச்சிக் கன்னியாக உருவெடுத்தார்.

அவள் தனியாக நடக்கும்போது, மக்கள் தன்னை மெய்மறந்து பார்ப்பது அவருக்கு மிகவும் பெருமையை தந்தது. தன் உடலில் ஏற்பட்ட மாறுதலை, சோபியாவும் கவனிக்காமல் இல்லை. அந்த வருடம் நடந்த பெண்களின் அழகுப் போட்டியில், அவருக்கு இரண்டாவது இடம். அதனால் அவருக்கு பரிசும் பணமும் கிடைத்தது.

சோபியாவுக்கு 15 வயதானபோது, 1950-ம் ஆண்டில் தாயும், மகளுமாக ரோம் நகரை நோக்கிப் பயணப்பட்டனர். வில்லனியின் ஒரே நோக்கம், தன் மகளை சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் சோபியாவுக்கு ஒரு துணை நடிகை பாத்திரம்தான் கிடைத்தது. அதுவும் மிகப்பெரிய படமான ‘க்வா வாதீஸ்’ (Quo Vadis) என்னும் வரலாற்று படத்தில். அதன்பிறகு சிறுசிறு வேடங்களிலும், மாடலாகவும், புத்தக அட்டைகளின் விளம்பரத்திற்காகவும் தொடர்ந்து நடித்தார்.

1952-ம் ஆண்டு வெளியான ‘லா பேவரிடா’ (La Favorita) என்ற படத்தில் பேசும் கதாபாத்திரம் கிடைத்தது. நாடக மேடையில் சோபியா நடிக்க வந்த போது, எடுத்த முதல் பாத்திரத்தின் பெயர் ‘லோரன்’ என்பதாகும். அதுவே அவரது பெயரோடு பின்னாளில் ஒட்டிக்கொண்டது. 1953-ம் வருடம் வெளிவந்த படமான ‘அய்டா’ (Aida)வில், கதாநாயகி வேடம் கிடைத்தது. இதில் சோபியா லோரன் மிகச் சிறப்பாக நடித்தார். 1954-ம் ஆண்டு, ‘தி கோல்ட் ஆப் நாப்ளஸ்’ (The Gold of Naples) திரைப்படம் வெளிவந்தது. இது இத்தாலிய சினிமா உலகம், சோபியா லோரனை மறக்க முடியாத அளவுக்கு புகழை வழங்கியது.

1957-ம் ஆண்டுதான் முதல் ஹாலிவுட் படத்தில் சோபியா லோரன் நடித்தார். அந்த படத்தின் பெயர் ‘தி பிரைட் அன்ட் தி பேஷன் (The Pride and the Passion). இந்தப் படத்தில் பிரபல நடிகர் கேரி கிராண்ட், பாடகர் பிராங்க் சினிட்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

1960-ம் வருடம் சோபியா லோரன் நடித்த ‘தி வுமன்’ (Two Women) திரைப்படம் வெளியானது. இது இரண்டாம் உலகப்போர் பற்றிய படம். இதில் சோபியாவின் மிகச் சிறந்த நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், அவர் தனது இளமை காலத்தில் பட்ட கஷ்டங்களை அப்படம் இப்படியே பிரதிபலித்து இருந்தது. அதனால் அவரால் அதில் அனுபவப்பூர்வமாக நடிக்க முடிந்தது. உலகப்புகழ் பெற்ற நடிகை என்று எல்லோரும் கொண்டாடினார்கள். இந்தப்படம் அவருக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுத் தந்தது.

1963-ம் ஆண்டு ‘எஸ்டர்டே, டூடே, அண்ட் டுமாரோ’ (Yesterday, Today, and Tomorrow) என்ற படம் வெளியானது. இந்தப் படம் மிகச் சிறந்த ெவளிநாட்டு படம் என்னும் ஆஸ்கார் விருதைப் பெற்றது. 1964-ல் இவரது நடிப்பில் ‘மேரேஜ் இத்தாலியன் ஸ்டைல்’ (Marriage Italian Style) திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சோபியா ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1967-ல் ‘எ கண்ட்ரீஸ் பிரம் ஹாங்ஹாங்’ (A Countess from Hong Kong) என்ற படத்தில் பிரபல நடிகரான மார்லன் பிராண்டோவுடன் நடித்தார்.

1970-ம் வருடம் தனது சொந்த ஊரான இத்தாலிக்கு திரும்பிய சோபியா லோரன், அங்கே மிகவும் பிரபலமான பல இத்தாலியப் படங்களில் தொடர்ந்து நடித்தார். லோரனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இவர்கள் பிறந்த சில வருடங்களில் லோரன் தனது நடிப்புத் தொழிலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து கொண்டு, தனது பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்கும் தாயாக மாறினார்.

நடிகை தொழிலில் இருந்து விடுபட்டாலும், அவரது மூளை, அவரை வியாபாரத் துறையில் இறக்கியது. 1981-ம் வருடம் தனது பெயரில் வாசனை திரவியங்கள் மற்றும் கண்களுக்கான அலங்கார மை போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். 1994-ம் வருடம் “பெண்ணும், அழகும்’ என்றொரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதேநேரம் சினிமாவில் நடிக்கவும் அவருக்கு அவ்வப்போது வாய்ப்புகள் வந்தன. அவைகளில் மிகவும் முக்கியமான 1994-ல் வெளிவந்த ‘ரெடி டூ வேர்’ (Ready to Wear), 1995-ம் வெளியான ‘க்ரும்ப்யர் ஓல்டு மேன்’ (Grumpier Old Men), 2009-ல் வெளியான ‘நைன்’ (Nine) போன்ற படங்களைக் கூறலாம். 85 வயதான நிலையில் இப்போதும் ‘தி லைப் அஹெட்’ (The Life Ahead) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இத்தனை வருடங்களில் 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட போதிலும், எங்கேயும் எப்போதும் தனது ஆரம்ப கால வரலாற்றை இவர் மறைத்ததே இல்லை. அதுவே அவருக்கு தனிப் புகழை சேர்த்தது.

50 வருடம் அசையாத மண வாழ்க்கை

‘தி பிரைட் அன்ட் தி பேஷன்’ படத்தில் நடித்தபோது, லோரன் மீது கேரி கிராண்ட் காதல் வசப்பட்டார். அதே சமயம் பட தயாரிப்பாளராக கார்லோ போன்டி என்பவரும், சோபியா லோரன் மீது காதல் கொண்டார். இருவரில் கார்லோ போன்டியை, சோபியா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 1957-ம் ஆண்டு நடந்தது. ஆனால் இந்த ஜோடியை சினிமா உலகமும், பத்திரிகை உலகமும் கேலி செய்தது. ஏனெனில் சேபியா லோரனை விட, இரண்டு மடங்கு வயது கொண்டவர் கார்லோ போன்டி. மேலும் சோபியாவின் உயரத்தில் பாதிதான் இருந்தார், கார்லோ.

1957-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்திருந்தாலும், சட்டப்படி அது இத்தாலியில் பல வருடங்கள் செல்லுபடியாகவில்லை. காரணம், கார்லோ போன்டியின் முதல் திருமணம் சில சட்டக் குழப்பங்களை ஏற்படுத்தியது. இதனால் சட்டம் இவர்கள் அதிகாரப்பூர்வமாக கணவன்-மனைவி என்று ஒப்புக்கொள்ள பல வருடங்கள் தனித்திருந்தார்கள். 1962-ம் ஆண்டுதான் அந்த அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தது.

இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இருக்கிறது. ஹாலிவுட் நடிகர்- நடிகைகள் இன்று திருமணம் செய்து, மறுநாள் விவாகரத்து செய்துகொள்வது மிகவும் சகஜம். ஆனால் லோரன் - போன்டி ஜோடி எவ்வித சிக்கலும் இல்லாமல், 2007-ம் ஆண்டு போன்டி இறக்கும் வரை 50 வருடங்கள் தங்களது திருமண பந்தத்தை தொடர்ந்தது.

எப்படி இவ்வளவு வருடங்கள் உங்கள் உறவு நீடித்தது என்று சிலர் கேட்டபோது, “நாங்கள் இருவரும் சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர்கள். அப்படித்தான் சினிமா உலகத்தில் எங்களைப் பார்த்தார்கள். ஆனால் நாங்களோ எங்களை மிகவும் பெரியவர்களாகவும், சிறந்தவர்களாகவும் என்றுமே கருதிக் கொண்டதே இல்லை. வீட்டுக்குள் நாங்கள் கணவன்- மனைவி. பிரபலங்கள் என்ற உணர்வு வீட்டுக்குள் எங்களுக்கு வந்ததில்லை. அதனால்தான் எங்களால் அமைதியாக காலம் தள்ள முடிந்தது” என்று சோபியா பதிலளித்திருந்தார்.

Next Story