புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள் -டி.ராஜேந்தர் பேட்டி


புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள்   -டி.ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2020 10:45 PM GMT (Updated: 21 Feb 2020 5:57 PM GMT)

புதிய படங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து வினியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் பேட்டியளித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வினியோகஸ்தர் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி.ராஜேந்தர் அளித்த பேட்டி வருமாறு:-

“கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும். தர்பார் திரைப்படத்தினை வினியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனரிடம் தார்மீக ரீதியில் அணுகி பிரச்சினை குறித்து பேசி சுமுக தீர்வு காணப்படும்.

புதிய திரைப்படம் வெளியாகி 8 வார காலத்திற்கு முன்பு ‘டிஜிட்டல் பிளாட்பாம்’களில் வெளியிட கூடாது. பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே தமிழகத்திலும் பின்பற்றப்பட வேண்டும். புதிய திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்பாக எந்த சேட்டிலைட் சேனலிலும் ஒளிபரப்ப கூடாது.

திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தை சரிசெய்ய 18 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை திரையிட்டு பார்க்காமல் வியாபாரம் செய்வது இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது”.

Next Story