சேரன் இயக்கத்தில் சிம்பு?
சேரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடங்குவதில் ஏற்கனவே இழுபறி நிலவியது. 2018-ம் ஆண்டிலேயே இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் சிம்பு காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டி படத்தை கைவிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மாநாடுக்கு போட்டியாக மகாமாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்தனர். இந்த மோதலை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடிக்க தயாராக இருப்பதாக கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்றும் உத்தரவாதம் அளித்தனர்.
இதையடுத்து மாநாடு படப்பிடிப்பை தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் உதயா, மனோஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 2 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது.
தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சிம்புவை சந்தித்து டைரக்டர் சேரன் கதை சொல்லி இருக்கிறார். இந்த கதை சிம்புவுக்கு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படம் முடிந்ததும் சேரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு தொடர்ந்து படங்களில் நடிப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story