அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்


அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்
x
தினத்தந்தி 24 Feb 2020 12:16 AM GMT (Updated: 24 Feb 2020 12:16 AM GMT)

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து திரைக்கு வந்த துப்பறிவாளன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தையும் விஷால் தயாரித்து நடித்து வருகிறார். இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கினார். கவுதமி, பிரசன்னா, ரகுமான் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். இதற்காக 40-க்கும் மேற்பட்ட படக்குழுவினருடன் விஷால் லண்டனில் முகாமிட்டார். அங்கு படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

2 நாட்கள் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு ரூ.5 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் வாக்குவாதமும் மோதலும் உருவானது. இதையடுத்து ஒரு வார படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு விஷால் சென்னை திரும்பி விட்டார். இந்த நிலையில் மிஷ்கின் தரப்பில் துப்பறிவாளன் படத்துக்கு மேலும் ரூ.40 கோடி செலவாகும் என்று புதிய பட்ஜெட் கணக்கை விஷாலிடம் ஒப்படைத்ததாகவும், சம்பளத்தையும் அதிகமாக கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இது விஷாலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மிஷ்கினை துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து விஷால் அதிரடியாக நீக்கி உள்ளார். மீதி காட்சிகளை விஷாலே இயக்க முடிவு செய்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story