ஹாலிவுட் நடிகைகள் மீ டூ புகார் பாலியல் வழக்கில் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி


ஹாலிவுட் நடிகைகள் மீ டூ புகார்   பாலியல் வழக்கில் ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி
x
தினத்தந்தி 25 Feb 2020 10:00 PM GMT (Updated: 25 Feb 2020 6:30 PM GMT)

ஹாலிவுட் நடிகைகள் மீ டூ புகார் வழக்கை விசாரித்த கோர்ட்டு ஹார்வி வெயின்ஸ்டீன் குற்றவாளி என்று தீர்ப்பளித்து உள்ளது.

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூவில் புகார் கூறப்பட்டது. ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.

இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது நடிகை அன்னபெல்லா சியோரா சாட்சியம் அளித்தார். ஹார்வி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது வலிப்பு வந்ததுபோல் உணர்ந்தேன் என்றார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்து உள்ளது.

தண்டனை விவரம் மார்ச் 11-ந்தேதி வெளியாகிறது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்பை கேட்டதும் ஹார்வி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த தீர்ப்பு ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story