‘மீ டூ’வால் பட வாய்ப்புகளை இழந்தேன் -நடிகை சுருதி ஹரிகரன்


‘மீ டூ’வால் பட வாய்ப்புகளை இழந்தேன்   -நடிகை சுருதி ஹரிகரன்
x
தினத்தந்தி 27 Feb 2020 10:00 PM GMT (Updated: 27 Feb 2020 8:41 PM GMT)

பாலியல் புகார் சொன்ன காரணத்தால் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக நடிகை சுருதி ஹரிகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே மற்றும் அர்ஜூனுடன் நிபுணன் ஆகிய படங்களில் நடித்தவர் சுருதி ஹரிகரன். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு, நிபுணன் படப்பிடிப்பில் அர்ஜூன் அனுமதி இல்லாமல் என்னை கட்டிப்பிடித்தார் என்று மீ டூவில் புகார் கூறினார்.

இதனை அர்ஜூன் மறுத்தார். இந்த நிலையில் பாலியல் புகார் சொன்ன காரணத்தால் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக சுருதி ஹரிகரன் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனது மீ டூ புகாரை சிலர் நம்பினர். சிலர் நம்பவில்லை. யாரையெல்லாம் நண்பர்கள் என்று நினைத்தேனோ அவர்கள் எனது நட்பை முறித்துக் கொண்டனர். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தாவும், தமிழில் சின்மயியும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்தினர். அதன்பிறகே எனக்கும் தைரியம் வந்தது.

மீ டூவில் புகார் சொன்னால் என்ன பிரச்சினைகள் வரும் என்று ஒரு மாதம் யோசித்தேன். மற்றவர்களும் என்னை போல் பாதிக்க கூடாது என்று முடிவு செய்து சமூக வலைத்தளம் மூலம் வெளிப்படுத்தினேன். ஆனால் எதிர்பாராதவை நடந்தன. எந்த துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது புரிந்தது.

ஒரு வருடமாக எனது வாழ்க்கை என் கையில் இல்லை. சினிமாவில் நடிக்க என்னை அழைக்காமல் ஒதுக்குகிறார்கள். இதனை நான் எதிர்பார்க்கவில்லை.”

இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறியுள்ளார்.

Next Story