கொரோனா அச்சுறுத்தல்: ரஷியாவில் விக்ரம் படப்பிடிப்பு ரத்து


கொரோனா அச்சுறுத்தல்:   ரஷியாவில் விக்ரம் படப்பிடிப்பு ரத்து
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 5:33 PM GMT)

கொரோனா அச்சுறுத்தலால் ரஷியாவில் நடந்த நடிகர் விக்ரம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு விக்ரம் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகிறது. கோப்ரா படத்தில் விக்ரம் 12-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கிறார். அவரது 7 தோற்றங்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.

கோப்ரா படப்பிடிப்பை ரஷியாவில் நடத்த திட்டமிட்டு சமீபத்தில் படக்குழுவினர் அந்த நாட்டுக்கு சென்று இருந்தனர். ஆனால் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா ரஷியாவிலும் பரவி உள்ளது. அங்கு 15 பேரை இந்த நோய் தாக்கி உள்ளது. இதனால் கோப்ரா படப்பிடிப்பை ரஷியாவில் தொடர்ந்து நடத்த முடியாமல் ரத்து செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “கோப்ராவை கொரோனா தாக்கியது. இந்திய அரசின் விதிமுறைகளால் ரஷிய படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்புகிறோம். போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும்” என்று வேதனையோடு பதிவிட்டுள்ளார். இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர்.

தற்போது படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

Next Story