கதாபாத்திரத்தில் திருப்தி இல்லாததால் சிரஞ்சீவி படத்தில் இருந்து திரிஷா விலகினார் படக்குழுவினருக்கு வாழ்த்து


கதாபாத்திரத்தில் திருப்தி இல்லாததால்   சிரஞ்சீவி படத்தில் இருந்து திரிஷா விலகினார்   படக்குழுவினருக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 14 March 2020 11:00 PM GMT (Updated: 14 March 2020 6:57 PM GMT)

சிரஞ்சீவியுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருந்த திரிஷா திடீரென்று அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். கதாபாத்திரம் திருப்தியாக இல்லாததால் விலகியதாக கூறியிருக்கும் அவர், அந்த படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

சென்னை, 

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் திரிஷா, 1999-ம் ஆண்டில் திரையுலகுக்கு அறிமுகமானார். பிரசாந்த் கதாநாயகனாக நடித்த ‘ஜோடி’ படத்தில், கதாநாயகி சிம்ரனின் தோழியாக துணை வேடத்தில் நடித்து இருந்தார்.

‘லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு பிரபல கதாநாயகர்களின் ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய பிற மொழி படங்களிலும் நடித்தார்.

திடீர் விலகல்

அவர் ஏற்கனவே சில தெலுங்கு படங்களில், சிரஞ்சீவி ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷா சம்மதித்து இருந்தார். திடீரென்று அந்த படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“சில நேரங்களில், முதலில் கூறியதை விட, சில விஷயங்களில் மாற்றம் ஏற்படும். இதைப்போல் படைப்பு மாற்றங்கள் சிரஞ்சீவி படத்தில் இருப்பதால், கதாபாத்திரம் திருப்தியாக இல்லாததால், அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அந்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்.

தெலுங்கு ரசிகர்களை கூடிய விரைவில், நல்ல படத்தில் சந்திப்பேன் என நம்புகிறேன்.”

இவ்வாறு அந்த பதிவில் திரிஷா கூறியிருக்கிறார்.

Next Story