தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பு 5-ந்தேதி தொடங்குமா? நடிகைகள் ராதிகா, குஷ்பு விளக்கம்


தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பு 5-ந்தேதி தொடங்குமா? நடிகைகள் ராதிகா, குஷ்பு விளக்கம்
x
தினத்தந்தி 21 April 2020 5:26 AM GMT (Updated: 21 April 2020 5:26 AM GMT)

தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்பு 5-ந்தேதி தொடங்குமா? நடிகைகள் ராதிகா, குஷ்பு விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை,

நடிகை குஷ்பு ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

தொலைக்காட்சி நிறுவனங்கள் 5-ந்தேதி படப்பிடிப்பை நடத்தும்படியும், தொடர்களுக்கான ஒளிபரப்பை மே 11-ந்தேதி தொடங்க இருப்பதாகவும் சொல்லி உள்ளன. ‘பெப்சி’ தலைவர் செல்வமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தரப்பில் பேசினேன். “இப்போதுதான் ரேபிட் சோதனை ஆரம்பிக்க போகிறோம், 26, 27-ந்தேதிதான் எப்போது படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்பதை சொல்ல முடியும்” என்றனர்.

பழைய மாதிரி எல்லோரையும் அழைத்து படப்பிடிப்பை நடத்தக் கூடாது. தேவையான ஆட்கள் மட்டும் இருந்தால் போதும் என்றும், ஜுனியர் நடிகர்கள் இல்லாமல் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகாமல் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றும் கூறினர். 

எல்லோரும் முக கவசம் போட்டுத்தான் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். முக கவசம் போடாமல் படப்பிடிப்பில் இருந்தால் அபராதம் விதியுங்கள். முக கவசம் கட்டாயம் என்றும் தெரிவித்தனர். எனவே அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள். மே 11-க்கு பதில் இன்னும் ஒரு வாரம் தள்ளி வைப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை ராதிகா வெளியிட்டுள்ள ஆடியோவில், “இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் மந்திரி தரப்பில் கருத்துக்கேட்டு வருகிறேன். குஷ்பு பேசியதையும் கேட்டேன். தொலைக்காட்சி நிறுவனங்கள் 5-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்லும்படி கூறவில்லை. தயாராக இருங்கள் என்றுதான் தெரிவித்துள்ளன. 

சென்னை அதிக பாதிப்பு உள்ள பகுதியாக உள்ளது. கோடம்பாக்கம் ஆள் நடமாட்டத்துக்கு உகந்த நிலையில் இல்லை. எனவே படப்பிடிப்பு பற்றி இப்போது யோசிக்க முடியாது. தற்போதைய நிலைமைகள் மாறிய பிறகு தயாரிப்பாளர்களுடன் கலந்து பேசி படப்பிடிப்பு குறித்து முடிவு செய்யலாம்” என்று பேசி உள்ளார்.

Next Story