உணவு தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் - குஷ்பு கோரிக்கை


உணவு தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் - குஷ்பு கோரிக்கை
x
தினத்தந்தி 23 April 2020 11:14 AM GMT (Updated: 23 April 2020 11:14 AM GMT)

உணவு தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வரும் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா நடிகைகள் விதவிதமாக எதையாவது செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதனிடையே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு சில நடிகைகள் தாங்கள் தயாரித்த உணவு திண்பண்டங்களை பதிவேற்றம் செய்து அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பதால் அனைவருக்கும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தி தாங்கள் சமைக்கும் வகை வகையான உணவுகளை ஒரு சில உணவு பிரியர்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, லாக்டவுன் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே பலரும் போராடும் நிலை இருப்பதால், இது போன்ற தருணத்தில் கண்ணுக்கு கவர்ச்சி கவரமாக உணவுவகைகளை காட்சிப்படுத்துவது சரியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். 

ஏழை எளிய மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் கூட நமது பகட்டை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டாம் என உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், விரும்பிய உணவு வகைகளை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றும், தாம் வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

உணவுவகைகளை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என நடிகைகளுக்கும், சமூக வலைதள ஆர்வலர்களுக்கும் நடிகை குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story