முகநூல் கணக்கு முடக்கம் - நடிகை ஷோபனா போலீசில் புகார்


முகநூல் கணக்கு முடக்கம் - நடிகை ஷோபனா போலீசில் புகார்
x
தினத்தந்தி 24 April 2020 4:42 AM GMT (Updated: 24 April 2020 4:43 AM GMT)

ஷோபனாவின் முகநூல் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர்.

சென்னை,

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் நடனம் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் ஷோபனாவின் முகநூல் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி உள்ளனர். அந்த கணக்கை ஹேக் செய்து ஊடுருவி வெவ்வேறு வீடியோக்களை வெளியிட்டனர். இதையடுத்து ஷோபனா தனது முகநூல் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர் என்றும், இதுகுறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது மீட்கப்படும் என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நடிகைகளின் வலைத்தள கணக்குகளை ஹேக் செய்து மர்ம நபர்கள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடிகை அனுபமா பரமேஸ்வரன் முகநூல் பக்கத்தில் மர்ம ஆசாமி ஊடுருவி அதில் அவரது மார்பிங் செய்யப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story