கொரோனா ஊரடங்கு வளர்ப்பு பிராணிகளுடன் பொழுதை கழிக்கும் நடிகைகள்


கொரோனா ஊரடங்கு வளர்ப்பு பிராணிகளுடன் பொழுதை கழிக்கும் நடிகைகள்
x
தினத்தந்தி 24 April 2020 5:05 AM GMT (Updated: 24 April 2020 5:05 AM GMT)

கொரோனா ஊரடங்கில் வளர்ப்பு பிராணிகளுடன் நடிகைகள் பொழுதை கழித்து வருகின்றனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் வளர்ப்பு பிராணிகளில் இருந்தும் பரவும் என்ற வதந்திகளால் பலர் வீட்டில் வளர்த்த நாய், பூனைகளை வெளியே துரத்தி விடுவதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனை நடிகர்-நடிகைகள் பலர் கண்டித்தனர். வளர்ப்பு பிராணிகளால் கொரோனா பரவாது என்று தெளிவுபடுத்தினர். இந்த கஷ்ட காலத்தில் பிராணிகளை நேசியுங்கள் குடும்பத்தில் ஒன்றாக அவைகள் இருக்கின்றன. வளர்ப்பு பிராணிகளை வெளியே துரத்தாதீர்கள் நாங்கள் ஜாலியாக கொரோனா ஓய்வை பிராணிகளோடு கழிக்கிறோம் என்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் தங்கள் வளர்ப்பு பிராணிகளை கொஞ்சி நேரத்தை கழிக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். சுருதிஹாசன் விரும்பி வளர்ப்பது பூனை. அதன் பெயர் கிளாரா. சுருதி பகிரும் படங்கள் வீடியோக்களில் அதிகமாக கிளாரா சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும். ரசிகர்களுடனும் சக நடிகைகளுடனும் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடும் நேரத்திலும் கிளாரா, வாலாட்டி ஏறி குதித்துக்கொண்டுதான் இருக்கும். அதோடு பேசுவார். பாடல்களை கேட்டும் அது சந்தோஷப்படும். என்னுடைய கிளாரா என்னுடன் சேர்ந்து உடற்பயிற்சி கூட செய்யும் என்றார் சுருதிஹாசன்.

கீர்த்தி சுரேஷ் வளர்க்கும் நாயின் பெயர் நைக். சூர்ய உதயத்தையும், அஸ்தமனத்தையும் என்னுடன்தான் அது பகிர்ந்து கொள்கிறது என்றார். நான் ஜிம்முக்கு போனாலும் வீட்டில் இருந்தாலும் பக்கத்தில் நைக்கும் இருக்கும் என்கிறார்.

பிரணிதாவின் நாய் பெயர் புளூ. அவர் கூறும்போது, “என்னுடைய புளூவோடு கொரோனா ஊரடங்கு ஓய்வை கழிக்கிறேன். நான் என்ன செய்தாலும் புளூவும் அதை செய்யும். நான் வீட்டில் இருப்பதால் அது சந்தோஷமாக இருக்கிறது. நிறைய நேரம் அதோடு கழிக்க முடிகிறது. படப்பிடிப்புகளில் இருக்கும்போது அதை பார்க்க முடியவில்லையே என்ற கவலை இருக்கும். இப்போது அது ரொம்ப ஜாலியாக இருக்கிறது” என்றார்.

நடிகை அஞ்சலி, போலோ என்ற நாய் குட்டியை வளர்க்கிறார். “அதோடு கொஞ்சி விளையாடிக்கொண்டு இருக்கிறேன். அது எப்போதும் என்னோடு ஒட்டிக்கொண்டு இருக்கத்தான் விரும்பும்.

முன்பெல்லாம் அதோடு இருப்பதற்கு நேரம் இல்லை. கொரோனா ஊரடங்கினால் இப்போது அதிக நேரம் அதோடு இருக்கிறேன்” என்றார் அஞ்சலி.

சமந்தா இரண்டு நாய் குட்டிகள் வளர்க்கிறார். ஊரடங்கு ஓய்வை அவற்றோடுதான் கழிக்கிறார்.

Next Story