ஊரடங்கில் விருந்து கொடுப்பதாக புகார்: ரஜினி பட நடிகையின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்


ஊரடங்கில் விருந்து கொடுப்பதாக புகார்: ரஜினி பட நடிகையின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்
x
தினத்தந்தி 25 April 2020 4:50 AM GMT (Updated: 25 April 2020 4:50 AM GMT)

ஊரடங்கில் விருந்து கொடுப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் விரைந்து நடிகை அனிதா ராஜ்வீட்டில் விசாரணை நடத்தினார்கள்.

மும்பை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்கவும் வற்புறுத்தப்படுகிறது. விருந்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளனர். கொரோனா தாக்கிய இந்தி பாடகி கனிகா கபூர், விருந்தில் பங்கேற்றதால் அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. கொரோனா ஊரடங்கில் நடந்த கன்னட நடிகர் நிகில் திருமணமும் சர்ச்சையானது. இந்த நிலையில் நடிகை ஒருவர் வீட்டில் விருந்து கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக புகுந்து விசாரணை நடத்திய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

அந்த நடிகையின் பெயர் அனிதா ராஜ். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த தாய்வீடு படத்தில் கதாநாயகியாக நடித்து 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிரேம் கீத், ஸமீன், ஆஸ்மன், மாஸ்டர்ஜி, ஸாரா சி ஜிந்தகி உள்பட பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.

சினில் ஹிங்கோரானி என்பவரை காதலித்து திருமணம் செய்து மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கை மீறி அனிதா ராஜ் தனது வீட்டில் பெரிய கூட்டத்தை கூட்டி விருந்து கொடுப்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரது வீட்டில் புகுந்து விசாரணை நடத்தினார்கள்.

அனிதா ராஜ் கூறும்போது, “நாங்கள் விருந்து நடத்தவில்லை எனது கணவர் மருத்துவர் என்பதால் பலர் சிகிச்சைக்கு வந்தனர்” என்றார். ஆனால் அவரது குடியிருப்பில் வசித்தவர்கள் விருந்துதான் கொடுத்தார் என்றனர்.

Next Story