நடிகை ஓவியா தனது பிறந்தநாளை முன்னிட்டு பர்த்டே கேக்கை அவரே ஸ்பெஷலாக செய்து கொண்டாடியுள்ளார்.
சென்னை,
களவாணி, கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை நடிகை ஓவியா வைத்துள்ளார். விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது எனலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஓவியா நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகை ஓவியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் #HappyBirthdayOviya என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ஓவியா ஆர்மி தெறிக்கவிட்டனர். அதற்கு நன்றி தெரிவித்து நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது பிறந்த நாள் கேக்கை தானே பேக் செய்ததாக தெரிவித்துள்ள ஓவியா, தனிமையில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களையும் அத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ரசிகர்களுக்காக மேலும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஓவியா. அதாவது தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஓவியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை பதிவிட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலைபோல் குவிந்து விட்டனர்.