“சந்திரமுகி-2’ வில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் கதை எப்படி இருக்கும்!


“சந்திரமுகி-2’  வில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் கதை எப்படி இருக்கும்!
x
தினத்தந்தி 30 April 2020 10:46 AM GMT (Updated: 30 April 2020 12:04 PM GMT)

சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகவும், படத்தின் கதை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு டைரக்‌ஷனில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது. படம், சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை புரிந்தது.

“இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது” என்று டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ‘சந்திரமுகி’ படத்தை இயக்கிய டைரக்டர் பி.வாசு, சந்திரமுகி-2 படம் விரைவில் உருவாக உள்ளதாகவும், பெரிய பட நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் சந்திரமுகி 2 படத்தில் தான் அடுத்து நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பி.வாசு இயக்குகிறார். 

சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா என பலர் நடித்திருந்தனர். மனோதத்துவ மருத்துவரான ரஜினி சந்திரமுகி பற்றி அறிந்து அந்த சந்திரமுகியாகவே மாறிய ஜோதிகாவை அதில் இருந்து மீட்பது போல படம் அமைந்து இருக்கும். 

தற்போது லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி 2ம் பாகத்தின் கதை எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அரண்மனையில் இருந்த வேட்டையன் மற்றும் சந்திரமுகி அகியோரின் பின்னணியை முழுமையாக விவரிப்பது போல முழு கதையும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கான கதையை கடந்த சில வருடங்களாக தயார் செய்து வந்துள்ளதாக பி.வாசு கூறி இருக்கிறார். ரஜினி அதில் நடிக்க முடியாத சூழ்நிலையில் அதில் லாரன்ஸை நடிக்க வைத்து புது கதாபாத்திரங்களுடன் சந்திரமுகி 2வை அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக அனைத்து படங்களும் ஷூட்டிங் நடத்த முடியாமல் முடங்கியுள்ளன. நிலைமை சீராகி அரசு அனுமதி அளித்த பிறகு சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story