டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபர் குறித்து பாடகி சின்மயி வெளியிட்ட தகவல்


டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபர் குறித்து பாடகி சின்மயி வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 30 April 2020 11:24 AM GMT (Updated: 30 April 2020 11:24 AM GMT)

டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய குமரி வாலிபர் குறித்து ஏற்கனவே எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.

சென்னை,

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). பட்டதாரியான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டரை போல பல இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பு மூலம் பெண்களை மயக்கி தன்னுடைய வலையில் வீழ்த்துவது, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் நெருக்கமாக இருப்பது, அந்த ஆபாச காட்சியை புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட லீலைகளில் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் முதல் வெளி மாவட்டத்தில் உள்ள வசதியான குடும்பத்தை சேர்ந்த பல பெண்களிடம் அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பெண் டாக்டர், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஆகிய 2 பேர் துணிச்சலாக புகார் கொடுத்தனர். தற்போது, பல பெண்களை ஏமாற்றிய காசி ஜெயிலில் உள்ளார்.

இந்நிலையில், இந்த இளைஞர் குறித்து பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பல பெண்கள் இந்த காமுகன் பற்றி தன்னிடம் இதற்கு முன்பாகவே கூறியிருந்ததாகவும், நான் இவனை பற்றி ஏற்கனவே எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதகவும் தற்போது இவன் சிறையில் உள்ளான் என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Next Story