டெல்லியில் நடிகை நிலாவின் தந்தையிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு


டெல்லியில் நடிகை நிலாவின் தந்தையிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 7 May 2020 4:42 AM GMT (Updated: 7 May 2020 4:42 AM GMT)

டெல்லியில் நடிகை நிலாவின் தந்தையிடம் ஸ்கூட்டரில் வந்த 2 பேர் கத்திமுனையில் மிரட்டி செல்போனை பறித்து சென்றுவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

புதுடெல்லி, 

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் நடிகை மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் அர்ஜுனுடன் மருதமலை படத்தில் நடித்தார். இவர் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள மாடல் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நிலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தனது தந்தை மாடல் டவுன் பிரின்ஸ் சாலையில் நடைபயிற்சி சென்றபோது ஸ்கூட்டரில் வந்த 2 பேர் கத்திமுனையில் மிரட்டி செல்போனை பறித்து சென்றுவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாநில போலீசாருக்கும் டுவிட் செய்திருந்தார்.

பின்னர் நிலா மற்றொரு டுவிட்டர் பதிவில், “இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை எண்ணை (எப்.ஐ.ஆர்.) குறிப்பிட்டு சம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நன்றி, காவல்துறையினரால் நாங்கள் பாதுகாக்கப்படுவதை உணரும்போது பெருமையாக இருக்கிறது. இந்த புகாரை செல்போனை பறித்ததற்காக கொடுக்கவில்லை முதியவர்களை பாதுகாப்பது முக்கியமானது என்பதாலே கொடுத்தேன் எனக்கூறி மீண்டும் விரைவான நடவடிக்கை எடுத்த டெல்லி போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

Next Story