மம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய மோகன்லால்


மம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறிய மோகன்லால்
x
தினத்தந்தி 7 May 2020 10:49 AM GMT (Updated: 7 May 2020 10:49 AM GMT)

மோகன் லால் தனது நண்பர் மம்முட்டிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறினார்.

சென்னை,

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார்.

மம்மூட்டி மற்றும் அவரது மனைவி சல்பத் நேற்று தங்களது 41 வது திருமண நாளை கொண்டாடினர்.

வீட்டிலேயே எளிமையாக அவர்கள் தங்களின் திருமண நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு நடிகர் மம்முட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்லால் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண நாள் வாழ்த்து கூறினார். 

மம்முட்டி மற்றும் அவரது மனைவியின் ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடியின் ஒரு ஓவியத்தைப் பகிர்ந்துகொண்டு, இனிய திருமண நாள் வாழ்த்துகள் இச்சக்கா மற்றும் பாபி என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோகன் லால்.

மோகன் லாலின் இந்த வாழ்த்தையும் அவரது ஓவிய பரிசையும் பார்த்த நடிகர் மம்மூட்டி தேங்க்யூ டியர் லால் என டிவிட்டியிருக்கிறார். இருவரின் டுவிட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story