சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள்?


சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள்?
x
தினத்தந்தி 20 May 2020 1:17 AM GMT (Updated: 20 May 2020 1:17 AM GMT)

சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள் எடுப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ் பட உலகில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வருகின்றன. ஏற்கனவே ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பாகங்கள் வந்துள்ளன. அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, விஷாலின் சண்டக்கோழி, அரண்மனை, கலகலப்பு, சென்னை-28 ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்தன. சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வந்தன. விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் அயன், அஞ்சாதே, சென்னை 28 படங்களின் அடுத்த பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அயன் படத்தில் சூர்யா, பிரபு, தமன்னா, ஜெகன், கருணாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர். கே.வி.ஆனந்த் இயக்கினார். படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. எனவே அயன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் கே.வி.ஆனந்துக்கு சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைப்போல் அயன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை 28 படத்தில் ஜெய், விஜயலட்சுமி உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் வசூல் குவித்தது. பின்னர் இதன் 2-ம் பாகம் வெளியாகியும் வரவேற்பு பெற்றது. தற்போது சென்னை 28 படத்தின் 3-ம் பாகம் எடுக்க வெங்கட்பிரபு ஆலோசித்து வருகிறார். சூழ்நிலை சரியாக அமைந்தால் சென்னை-28 மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதுபோல் மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா நடித்து 2008-ல் வெளியாகி வெற்றி பெற்ற அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. இதில் அருண்விஜய், பிரசன்னா நடிக்க உள்ளனர்.

Next Story