தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 சதவீத தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி


தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 சதவீத தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
x
தினத்தந்தி 25 May 2020 12:45 AM GMT (Updated: 25 May 2020 12:45 AM GMT)

தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 சதவீத தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.


தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றி. அனைத்து தொழிற்சாலைகளுக்கும் 50 சதவீத தொழிலாளர்களை வைத்து பணிகளை தொடங்கலாம் என்று அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. ஆனால் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு 20 பேர் பணிபுரிய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. ஏறக்குறைய 150 முதல் 200 தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய இடத்தில் 20 தொழிலாளர்களை கொண்டு பணிபுரிவது இயலாத காரியம். சின்னத்திரை டி.வி தொடர்களில் 10 முதல் 20 நடிகர் நடிகைகள் இருப்பார்கள். தொழிலாளர்களை எவ்வளவு குறைத்தாலும் 35-ல் இருந்து 40 தொழிலாளர்கள் இருப்பார்கள். ஆகவே குறைந்தபட்சம் 60 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கினால்தான் டி.வி தொடர் படப்பிடிப்பை நடத்த முடியும். தொழிற்சாலைகளுக்கு வழங்கியதுபோல் 50 சதவீத தொழிலாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடிக்கான திட்டங்களில் திரைப்படத்துறைக்கு எந்தவித நலத்திட்டங்களையும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.

Next Story