இயக்குனருடன் மறுமணம்: “எனக்கு குடும்பத்தினர் ஆதரவு இல்லை” - நடிகை வனிதா அறிக்கை


இயக்குனருடன் மறுமணம்: “எனக்கு குடும்பத்தினர் ஆதரவு இல்லை” - நடிகை வனிதா அறிக்கை
x
தினத்தந்தி 18 Jun 2020 7:55 PM GMT (Updated: 18 Jun 2020 7:55 PM GMT)

இயக்குனருடன் மறுமணம் செய்ய உள்ள நடிகை வனிதா, தனக்கு குடும்பத்தினர் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. மாணிக்கம் உள்பட தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார் இவர் நடிகர் விஜயகுமார் மறைந்த நடிகை மஞ்சுளா தம்பதியின் மகள் ஆவார். வனிதா ஏற்கனவே நடிகர் ஆகாஷையும் ஆந்திராவை சேர்ந்த ராஜன் ஆனந்தையும் திருமணம் செய்து விவாகரத்து செய்தார். இவருக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். தற்போது பீட்டர் பால் என்பவரை வருகிற 27-ந்தேதி 3-வதாக திருமணம் செய்து கொள்கிறார். இதுகுறித்து வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“என் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. நான் 40 வயதை நெருங்குகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஏற்ற துணையை தேர்வு செய்வதில் ஒரு கனவு இருக்கும். எனது கனவு நனவாகி இருக்கிறது. பீட்டர் பால் எனது வாழ்க்கையில் நுழைந்துள்ளார். அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறேன். ஒரு நண்பராக வந்து எனது வாழ்க்கையின் பிரச்சினைகளை சரிபடுத்தினார். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்ததும் சந்தோஷப்பட்டேன்.

எங்கள் திருமணத்துக்கு எனது குழந்தைகளும் சம்மதம் சொன்னதும் கண்களில் கண்ணீர் வந்தது. இது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம். எனது குடும்பம் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து எனக்கு எந்தவிதமான ஆதரவோ உதவியோ கிடைக்கவில்லை. என் மகிழ்ச்சிக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழ முடிவு செய்துள்ளேன். என் இதயத்தை திருடிய பீட்டர் பால் ஒரு இயக்குனர். அன்பானவர். நேர்மையானவர், அவரது படைப்பு விரைவில் திரையில் வரும். அரசின் விதிமுறையை பின்பற்றி எங்கள் திருமணம் நடக்கும்” 

இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story