நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...? விக்னேஷ் சிவன் கோபம்


நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...? விக்னேஷ் சிவன் கோபம்
x
தினத்தந்தி 22 Jun 2020 7:58 AM GMT (Updated: 22 Jun 2020 7:58 AM GMT)

கொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

சென்னை

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று திரும்பிய பிரபலங்களும் தங்களது வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்றும், முழுக்க முழுக்க அது ஒரு வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வதந்தியைப் பார்த்து கோபமடைந்த விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக நடனமாடுவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், எங்களைப் பற்றிய செய்திகளை இப்படித் தான் பார்க்கிறோம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்தது போல் புகைப்படங்கள் டிசைன் செய்த உங்களையும் அப்படித் தான் பார்க்கிறோம்.

நாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறோம். உங்களைப் போன்ற நகைச்சுவையாளர்களின் கற்பனை மற்றும் அறிவற்ற ஜோக்குகளை பார்க்க கடவுள் எங்களுக்கு போதுமான வலிமை மற்றும் மகிழ்ச்சியை தந்திருக்கிறார்” என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.




Next Story