தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை: வாக்குமூலத்தை பதிவு செய்தார்


தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை: வாக்குமூலத்தை பதிவு செய்தார்
x
தினத்தந்தி 27 July 2020 10:14 PM GMT (Updated: 27 July 2020 10:14 PM GMT)

தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

சென்னை, 

நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் கூடுதலாக ரத்த அழுத்த மத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் போலீசார் அவரை மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர் மயக்கநிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் அவர் பேசிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும்போது, ‘நடிகை விஜயலட்சுமி மயக்கம் தெளிந்த பிறகு, அவரிடம் வாக்குமூலம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு நடிகை விஜயலட்சுமிக்கு நேற்றுமுன்தினம் இரவே மயக்கம் தெளிந்தது.

இறக்கும் தருவாயில் இருப்பவர்களிடம் மாஜிஸ்திரேட்டு மூலம் மரண வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுப்பது வழக்கம். அந்த வகையில், மயக்கம் தெளிந்த நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஒருவர் நடிகை விஜயலட்சுமி சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று அவரிடம் விசாரணை நடத்தினார். விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ பதிவின் உண்மை தன்மை குறித்தும், வீடியோவில் உள்ள கருத்துகளை அவர் வலியுறுத்துகிறாரா? என்பது பற்றியும் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

விஜயலட்சுமி தெரிவித்த கருத்துகளை அவரது வாக்குமூலமாக மாஜிஸ்திரேட்டு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மாஜிஸ்திரேட்டு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

விஜயலட்சுமி குணம் அடைந்து வருவதாகவும் போலீசார் கூறினார்கள்.

Next Story