அமைதியாக கடந்து செல்வோம் - ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்


அமைதியாக கடந்து செல்வோம் - ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 July 2020 1:24 AM GMT (Updated: 28 July 2020 1:24 AM GMT)

அமைதியாக கடந்து செல்வோம் என்று ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொந்தளித்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலக பிரபலங்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் இந்தி திரையுலகினரை சாடி உள்ளனர்.

இந்தி இயக்குனர் சேகர் கபூர் டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் ஆஸ்கார் விருது பெற்று விட்டதுதான் பிரச்சினை. அது இந்தி பட உலகுக்கு பெரிய தோல்வி. இந்தி திரையுலகை விட நீங்கள் பெரிய திறமைசாலி என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையிலும் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில், “பணத்தை இழந்தால் சம்பாதித்து விடலாம். புகழை இழந்தாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நேரத்தை இழந்தால் அது ஒருபோதும் திரும்பி வராது. அமைதியாக இருங்கள். இதை கடந்து செல்லலாம். நாம் செய்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். நடிகை மாளவிகா மோகனன், “எப்போதும் எங்களுக்கு பிடித்தமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்” என்று கூறியுள்ளார். நடிகர் அசோக் செல்வன், நடிகைகள் நிலா, சுருதி ஹரிகரன், பாடகர் சீனிவாஸ், பாடகி ஸ்வேதா மோகன் உள்பட பலர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Next Story