கொரோனாவில் மீண்ட ஐஸ்வர்யாராய் உருக்கம்
கொரோனாவில் இருந்து குணமானதை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
இந்தி நடிகர் அமிதாப்பசன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆரத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் ஐஸ்வர்யாராய்க்கும் ஆரத்யாவுக்கும் லேசான தொற்று இருந்ததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றனர். பின்னர் மூச்சுத்திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு ஐஸ்வர்யாராயும் ஆரத்யாவும் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
குணமானதை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “எனது குடும்பத்தினர் குணமடைய வேண்டி எல்லோரும் அன்பும் அக்கறையும் செலுத்தினீர்கள். பிரார்த்தனை செய்தீர்கள். உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கடன்பட்டு இருக்கிறோம். உங்கள் அன்பை பார்த்து உணர்ச்சி பெருக்கில் ஆழ்ந்து போனேன். இதயம் கரைந்தேன். அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உங்கள் நலனுக்காக எப்போதும் பிரார்த்திப்பேன். எல்லோரும் நலமாக, பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுளார். கையெடுத்து கும்பிடுவதுபோன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story