வலைத்தளத்தில் அவதூறு: நடிகை மீராமிதுனுக்கு சனம் ஷெட்டி நோட்டீஸ்
வலைத்தளத்தில் அவதூறான பதிவு தொடர்பாக, நடிகை மீராமிதுனுக்கு சனம் ஷெட்டி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமான நடிகை மீராமிதுன் சமீபத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி சொன்ன சர்ச்சை கருத்துகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. டைரக்டர் பாரதிராஜாவும் கண்டித்தார். அம்புலி, சதுரம் 2, வால்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டியும் ‘சினிமா துறையில் விஜய் கஷ்டப்பட்டு உழைப்பு திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். அவரை பற்றி பேசும் முன்பு யோசிக்க வேண்டும். இணைய துன்புறுத்தலை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மீராமிதுனை எச்சரித்தார்.
இதனால் சனம் ஷெட்டிக்கு எதிராக அவதூறான பதிவை டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டார். இதையடுத்து மீராமிதுனுக்கு சனம் ஷெட்டி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் சனம் ஷெட்டி கூறும்போது, ‘என்னை பற்றி சமூக வலைத்தளத்தில் மீராமிதுன் அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதற்காக என்னிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும்’ என்றார். இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story