இரும்புத்திரை, ராட்சசன் 2-ம் பாகங்கள்


இரும்புத்திரை, ராட்சசன் 2-ம் பாகங்கள்
x
தினத்தந்தி 21 Aug 2020 12:00 AM GMT (Updated: 20 Aug 2020 7:30 PM GMT)

இரும்புத்திரை, ராட்சசன் படங்களின் 2-ம் பாகங்கள் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில் விஷாலின் இரும்புத்திரை, விஷ்ணு விஷாலின் ராட்சசன் படங்களுக்கான 2-ம் பாகம் கதைகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரும்புத்திரை படம் 2018-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. நாயகியாக சமந்தாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து இருந்தனர். தொழில்நுட்ப மோசடிகளை பற்றி படம் பேசியது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அர்ஜுனுடன் மீண்டும் இரண்டாவது தடவையாக இணைந்து நடிக்க இருப்பதாக டுவிட்டரில் விஷால் அறிவித்து உள்ளார். இதன்மூலம் இரும்புத்திரை 2-ம் பாகத்தில் இருவரும் மீண்டும் நடிப்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ராட்சசன் படமும் 2018-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இதில் விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.

இந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் வலைத்தளத்தில் ரசிகர் கேள்விக்கு பதில் அளித்தபோது ராட்சசன் இரண்டாம் பாகத்துக்கான கதை தயாராகி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story