ஓ.டி.டி. தளத்தில் வெளியிட விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்க போட்டி? ரூ.100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு


ஓ.டி.டி. தளத்தில் வெளியிட விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்க போட்டி? ரூ.100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
x
தினத்தந்தி 25 Aug 2020 12:00 AM GMT (Updated: 24 Aug 2020 7:31 PM GMT)

ஓ.டி.டி. தளத்தில் வெளியிட விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்க ரூ.100 கோடிக்கு விலை பேசுவதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்கு மேல் தியேட்டர்களை மூடி வைத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் பார்வை ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளன. புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணைய தளங்களில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ்வின் லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. அடுத்து சூர்யாவின் சூரரை போற்று படமும் இணைய தளத்தில் வெளியாகிறது .

இந்த படத்தை ரூ.60 கோடி செலவில் எடுத்ததாகவும் அதே தொகைக்கு ஓ.டி.டி.தளத்துக்கு விற்று இருப்பதாகவும் மேலும் சாட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் உரிமை ரூ.40 கோடிக்கு விலைபோனதாகவும் மொத்தம் ரூ.100 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. தியேட்டர்கள் திறந்தாலும் உள்ளே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவில் ஒரு இருக்கையை காலியாக வைப்பது ஒரு வரிசைக்கு பின்னால் உள்ள வரிசையில் ஆட்களை நிரப்பாமல் விடுவது என்று சமூக இடைவெளியை கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் இதனால் ஆயிரம் பேர் பிடிக்கும் தியேட்டரில் 400-க்கும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே விற்க முடியும் என்றும் பொதுமக்களும் அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் இதனாலேயே பெரிய படங்களை ஓ.டி.டி தளத்துக்கு கொண்டு வர ஆலோசிக்கப்படுகிறது என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்கவும் முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.70 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாக இணைய தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் அதிபர்களோ திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக மாஸ்டரை திரையிட்டு ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு இழுக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். மாஸ்டர் ஓ.டி.டியில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த படம் ஏப்ரல் 9-ந்தேதியே திரைக்கு வர தயாராகி கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story