ஆணவ கொலையை படமாக்க கோர்ட்டு தடை


ஆணவ கொலையை படமாக்க கோர்ட்டு தடை
x
தினத்தந்தி 26 Aug 2020 12:44 AM GMT (Updated: 26 Aug 2020 12:44 AM GMT)

ஆணவ கொலையை படமாக்க கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உண்மை சம்பவங்களை படமாக எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் படமாக்கி வெளியிட்டார். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ரத்தசரித்திரம் படமும் உண்மை சம்பவம்தான். அடுத்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து மர்டர் என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்து போஸ்டரை வெளியிட்டு உள்ளார். தெலுங்கானாவை சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை பிரனாய் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாதியை காரணம் காட்டி திருமணத்துக்கு அம்ருதாவின் தந்தை மாருதிராவ் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2018-ல் கூலிப்படையை வைத்து பிரனாய் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அம்ருதாவின் தந்தை உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் மாருதிராவ் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவங்களை வைத்தே மர்டர் படத்தை எடுக்கப்போவதாக ராம்கோபால் வர்மா தெரிவித்து உள்ளார். அம்ருதாவாக அவஞ்சா சஹிதி நடிக்கிறார். தற்போது பிரனாய் வீட்டில் வசித்து வரும் அம்ருதா இந்த படத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தார். பிரனாயின் தந்தை ஐதராபாத் நலங்கொண்டா கோர்ட்டில் படத்தை தடை செய்யும்படி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பு வரும்வரை மர்டர் படத்தை எடுக்க கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story