தாதா பெயரை சொல்லி நடிகரிடம் ரூ.35 கோடி கேட்டு மிரட்டல்


தாதா பெயரை சொல்லி நடிகரிடம் ரூ.35 கோடி கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 29 Aug 2020 12:00 AM GMT (Updated: 29 Aug 2020 12:00 AM GMT)

தாதா பெயரை சொல்லி நடிகரிடம் ஒரு நபர் ரூ.35 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். இவர் தமிழில் அஜித்குமாரின் ஆரம்பம் படத்தில் மத்திய மந்திரியாக நடித்து இருந்தார். சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், பிரபாஸின் சாஹோ ஆகிய படங்களிலும் தெலுங்கில் டான் சீனு, குண்டூர் டாக்கீஸ், வினேத ராமா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் சஞ்சய்தத் நடித்த குருஷேத்திரா, சுனில் ஷேட்டி நடித்த ரக்த், சிட்டி ஆப் கோல்டு உள்பட 15-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மகேஷ் மஞ்ச்ரேக்கருக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவன் தன்னை தாதா அபுசலீம் கோஷ்டியை சேர்ந்தவன் என்று அறிமுகம் செய்து தனக்கு ரூ.35 கோடி தரவேண்டும் என்றும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினான்.

இதுகுறித்து மும்பை தாதர் போலீசில் மஞ்ச்ரேக்கர் புகார் செய்தார். போலீசார் போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்த ரத்னகிரியை சேர்ந்த மெலின் துஷார் என்பவரை கைது செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த் பவார் கூறும்போது, ‘மிரட்டல் விடுத்தவர் டீகடை நடத்துகிறார் என்றும், கொரோனாவால் வருமானம் இல்லாததால் மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்’ என்றும் தெரிவித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story