தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை


தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை
x
தினத்தந்தி 31 Aug 2020 10:45 PM GMT (Updated: 31 Aug 2020 6:58 PM GMT)

தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ.திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதற்றமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத்தான், சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம். இப்போதும் கொரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கியே வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும், பட்டினியால் வாடுவோர்களையும் கருத்திற்கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம். பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும். தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கு செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவண செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம். பிற்சேர்க்கை பணி செய்தாலும், படப்பிடிப்புத் தளம் சென்றாலும், நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான். அதன் மூலமே எம் தயாரிப்பாளர்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும். வழி முறைகள் வகுத்துக் கொடுத்து திறந்துவிட மாட்டீர்களா என நப்பாசைப் படுகிறேன். ஆவண செய்ய அத்தனை சினிமா குடும்பங்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story