பெங்களூருவில் உள்ள பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆபாச உடையில் நடனம் போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்


பெங்களூருவில் உள்ள பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே ஆபாச உடையில் நடனம் போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்
x
தினத்தந்தி 6 Sep 2020 3:40 AM GMT (Updated: 6 Sep 2020 3:40 AM GMT)

பெங்களூருவில் உள்ள பூங்காவில் ஆபாச உடையில் நடனமாடியதுடன், பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை சம்யுக்தா ஹெக்டேவை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

கன்னடம் மற்றும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர், கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்திலும், வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களிலும் சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே நேற்று முன்தினம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே அகரா ஏரியில் உள்ள பூங்காவில் தனது தோழிகளுடன் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு ஆபாசமாக நடன பயிற்சியில் ஈடுபட்டார். இதனை பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பூங்காவில் ஆபாச உடை அணிந்து நடனமாடுவது குறித்து சம்யுக்தா ஹெக்டேவிடம் அங்கிருந்தவர்கள் கேட்டனர். மேலும் பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளியும், ஆபாச உடையுடன் நடனமாடுவதை கண்டித்து சம்யுக்தா ஹெக்டேவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த சம்யுக்தா ஹெக்டேவும், அவரது தோழிகளும் பொதுமக்களுடனும், காவலாளியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி உடனடியாக எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள்.

அதன்பிறகு, நடிகை சம்யுக்தா ஹெக்டே, அவரது தோழிகளை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் அகரா ஏரி பாதுகாப்பு அமைப்பின் தலைவி கவிதா ரெட்டியும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. பூங்காவில் ஆபாச உடை அணிந்து நடனமாடியதுடன், பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி நடிகை சம்யுக்தா ஹெக்டேவை போலீசார் எச்சரித்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையில், “நான் எந்த தவறும் செய்யவில்லை, அரைகுறை ஆடை அணிந்து நடனமாடவில்லை, என்னுடைய தோழிகளுடன் சேர்ந்து நடன பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டேன்” என்று நடிகை சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

பூங்காவில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story