போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - நடிகை சஞ்சனா கல்ராணி கைது


போதைப்பொருள் கடத்தல் விவகாரம்  -  நடிகை சஞ்சனா கல்ராணி  கைது
x
தினத்தந்தி 8 Sep 2020 7:59 AM GMT (Updated: 8 Sep 2020 7:59 AM GMT)

பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கன்னட திரை உலகில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதைப்பொருட்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த போதைப்பொருட்கள் விற்பனை விவகாரத்தில் நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பரும், அரசு அதிகாரியுமான ரவிசங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நடிகை ராகிணி திவேதி உள்பட 12 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.

இந்நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்காக சஞ்சனா கல்ராணியை பெங்களூருவில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்

Next Story