பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பில்லை; அழுது புலம்பிய சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் மம்முட்டி


பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பில்லை; அழுது புலம்பிய சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் மம்முட்டி
x
தினத்தந்தி 13 Sep 2020 5:59 PM GMT (Updated: 13 Sep 2020 5:59 PM GMT)

கேரளாவில் நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என அழுது புலம்பிய 4 வயது சிறுமிக்கு அவர் பேரின்ப அதிர்ச்சி தந்தார்.

மலப்புரம்,

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட திரூர்காடு பகுதியை சேர்ந்த ஹமீது அலி மற்றும் சஜ்னா தம்பதியரின் மகள் பீலிமோள் (வயது 4).  கடந்த 7ந்தேதி தனது பிறந்தநாளன்று நடிகர் மம்முட்டி கேக் வெட்டி கொண்டாடினார்.  அந்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.  இதனை ஹமீது அலி தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து பார்த்துள்ளார்.

அப்போது, நடிகர் மம்முட்டியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்று கூறி சிறுமி பீலிமோள் அழ தொடங்கினார். மகள் அழுது கொண்டிருந்த காட்சியை தாய் சஜ்னா பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவை கண்ட நடிகர் மம்முட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டு, சிறுமியிடம் கோபப்பட வேண்டாம் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், திடீரென பீலிமோளின் வீட்டிற்கு கேக்கை பார்சலில் அனுப்பி தனது பிறந்த நாளை  கொண்டாடுமாறு மம்முட்டி வேண்டுகோள் விடுத்தார். குடும்பத்தினரோடு கேக்கை வெட்டி கொண்டாடிய சிறிது நேரத்தில் மம்முட்டி வீடியோ காலில்  சிறுமி பீலிமோளுடன் உரையாடினார்.  இந்த நிகழ்வு பீலிமோளுக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்கும் பேரின்ப அதிர்ச்சியாக இருந்தது.

Next Story