பிறழ் சாட்சியாக மாறினார் நடிகை கடத்தல் வழக்கில் பாமா பல்டி


பிறழ் சாட்சியாக மாறினார் நடிகை கடத்தல் வழக்கில் பாமா பல்டி
x
தினத்தந்தி 20 Sep 2020 11:15 PM GMT (Updated: 20 Sep 2020 8:15 PM GMT)

பிறழ் சாட்சியாக மாறினார் நடிகை கடத்தல் வழக்கில் பாமா பல்டி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்த பிரபல நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைதாகி 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வந்துள்ளார். கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் நடிகைக்கு ஆதரவாக சாட்சி சொன்ன சிலர் இப்போது திலீப் பக்கம் சாய்ந்துள்ளனர். மலையாள நடிகை பாமாவும், நடிகர் சித்திக்கும் மலையாள நடிகர் சங்க கலைநிகழ்ச்சி ஒத்திகை நடந்தபோது பாதிக்கப்பட்ட நடிகைக்கும், திலீப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று ஆரம்பத்தில் வாக்குமூலம் அளித்ததால் போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். தற்போது கோர்ட்டில் இருவரும் திலீப்புக்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்கும் மோதல் நடந்தது குறித்து தெரியாது என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து இருவரும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர். இதனால் பாமாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நடிகை ரேவதி கூறும்போது, “பாதிக்கப்பட்ட நடிகைக்கு நெருக்கமாக இருந்த பாமா வாக்குமூலத்தை மாற்றி சொன்னதை நம்ப முடியவில்லை. நட்பை மறந்து விட்டார்” என்றார். நடிகை ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோரும் பாமாவை கண்டித்துள்ளனர். பாமாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

Next Story