தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்


தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்
x
தினத்தந்தி 23 Sep 2020 11:08 PM GMT (Updated: 23 Sep 2020 11:08 PM GMT)

தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்.


கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றின் படப்பிடிப்புகளை அடுத்த மாதம் தொடங்க தயாராகி வருகிறார்கள். இதற்காக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அடங்கிய படக்குழுவினர் அனைவரும் அவரவர் வீட்டிலேயே 2 வாரத்துக்கு தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்தது. அடுத்து வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். தற்போது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை மற்றும் ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். அண்ணாத்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 5 நாயகிகள் நடிக்கின்றனர். சிவா இயக்குகிறார்.

கமலின் புதிய படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்துகிறார்கள். இது அவருக்கு 232-வது படம். படத்துக்கு எவனென்று நினைத்தாய் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். இந்த நிலையில் குரு என்ற பெயரை பரிசீலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே குரு பெயரில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த படம் 1980-ல் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story