தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை


தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2020 12:47 AM GMT (Updated: 7 Oct 2020 12:47 AM GMT)

தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் என நடிகை காஜல் அகர்வால் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து காஜல் அகர்வால் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“எனக்கும் கவுதம் கிச்சலுக்கும் வருகிற 30-ந்தேதி மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. குடும்பத்தினர் மத்தியில் எளிமையாக இந்த திருமணம் நடக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொரோனா நோய் தொற்று காலம் எங்கள் மகிழ்ச்சியில் மெல்லிய ஒளியை பாய்ச்சி உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து எங்கள் வாழ்க்கையை தொடங்க இருக்கிறோம். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். இதற்கு உங்கள் ஆசிர்வாதத்தை வேண்டுகிறோம். புதிய தேவை மற்றும் அர்த்தங்களோடு நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்களின் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி.”  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Next Story