பட அதிபர்கள் நலனை பாதுகாக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - டி.ராஜேந்தர் பேட்டி


பட அதிபர்கள் நலனை பாதுகாக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - டி.ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2020 12:22 AM GMT (Updated: 15 Oct 2020 12:22 AM GMT)

பட அதிபர்கள் நலனை பாதுகாக்க தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“கொரோனாவால் 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. 15-ந்தேதி முதல் (இன்று) சில நிபந்தனைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். கேண்டினில் பொருட்கள் விற்க கூடாது என்று பல நிபந்தனை விதித்துள்ளனர். இதில் 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி, 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்த வேண்டி உள்ளது. மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உள்ளாட்சி வரியை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன்.

கட்டணம் செலுத்தாமல் தியேட்டர்களின் லைசென்சை அரசு புதுப்பித்து தர வேண்டும். வி.பி.எஸ். கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். திரையுலகில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி உள்ளனர். இது வருந்தத்தக்கது. தயாரிப்பாளர் சங்கம்தான் தாய் சங்கம். அது நிமிர்ந்து நிற்க வேண்டும். நான் தயாரிப்பாளர்கள் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறேன். ஓ.டி.டி.யில் சிறிய தயாரிப்பாளர்கள் படங்களை வாங்கவும் குரல் கொடுத்தேன். தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் என்னை வற்புறுத்தினர். எனவே தயாரிப்பாளர்கள் நலனை பாதுகாக்க தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன். செயலாளர் பதவிக்கு மன்னன் நிற்கிறார். இதர பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.”

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

Next Story