சினிமாவில் வாய்ப்பு தருவதாக பிரபல டைரக்டர் பெயரில் நடிகைகளிடம் மோசடி
அல்போன்ஸ் புத்திரன் பெயரில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக துணை நடிகைகளிடமும், இளம் பெண்களிடமும் மோசடி நடக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் வெளியான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இதில் நிவின்பாலி, நஸ்ரியா நடித்து இருந்தனர். மலையாளத்தில் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா, அனுபமா பரமேஸ்வரன் நடித்து பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தையும் இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது பகத் பாசில் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பாட்டு என்று பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் பெயரில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக துணை நடிகைகளிடமும், இளம் பெண்களிடமும் மோசடி நடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அல்போன்ஸ் புத்திரன் தனது முகநூல் பக்கத்தில் இரண்டு செல்போன் எண்களை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், “இந்த நம்பரில் இருந்து எனது பெயரை சொல்லி சிலர் பேசி மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அவர்களுக்கு உங்களின் தனிப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்ப வேண்டாம். இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story