இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்


இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
x
தினத்தந்தி 26 Nov 2020 10:00 PM GMT (Updated: 26 Nov 2020 11:41 PM GMT)

டைரக்டர் மிஷ்கின் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான தகவலை பதிவிட்டுள்ளார்.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் மிஷ்கின் தனது முகநூல் பக்கத்தில் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் கூறியிருப்பதாவது:-

“நான் ஐந்தாவது வயதில் எனது தந்தையுடன் திண்டுக்கல்லில் உள்ள என்.வி. ஜி.பி தியேட்டருக்கு சென்று புரூஸ்லி நடித்த எண்டர் தி டிராகன் படத்தை பார்த்தேன். சிறுவனாக அந்த தியேட்டரில் பல படங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன். இப்போது அடுத்த படத்தின் லொகேஷனுக்காக திண்டுக்கல் சென்றபோது அந்த தியேட்டரை பார்க்க சென்றேன். தியேட்டர் உரிமையாளர் இங்கு படம் ஏதும் ஓடவில்லை என்றார். என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர் என்றேன். தியேட்டரில் ஐந்து வயது சிறுவனாக நுழைந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்து திரையை அண்ணாந்து பார்த்தேன். சிறுவயதில் பார்த்த தூண்கள் அப்படியே இருந்தன. ஏன் தியேட்டரில் படம் ஓடல என்று கேட்டேன். காலம் மாறிவிட்டது. டி.வி. பைரசி, நெட் வந்ததால் படம் ஓடுறத நிப்பாட்டிட்டோம். அடுத்த வாரம் இந்த தியேட்டரை இடிக்கப்போகிறோம் என்றார். நெஞ்சில் வலியுடன் காரில் ஏறி வந்து விட்டேன். அந்த தியேட்டரின் வாசலில் அண்ணாந்து பார்த்தவாறு ஒரு ஐந்து வயது சிறுவன் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story