9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு
சென்னையில் படப்பிடிப்பை நடத்த தயாராகி வந்த நிலையில் ஊரடங்கினால் பல மாதங்களாக பட வேலைகள் முடங்கின.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, சரத்குமார், பிரபு, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ்கான், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனாவுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடத்தி முடித்தனர். தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை நடத்த தயாராகி வந்த நிலையில் ஊரடங்கினால் பல மாதங்களாக பட வேலைகள் முடங்கின. தற்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் படப்பிடிப்பில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் பணியாற்ற கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளதால் பட வேலைகளை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் உருவானது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவியாளர்கள் என்று 400 பேர் வரை பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்று பேச்சு பரவியது. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு வருகிற 10-ந்தேதி பொள்ளாச்சியில் மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டு உள்ளார். தொடர்ந்து மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக நடிகர், நடிகைகள் பொள்ளாச்சியில் குவிய உள்ளனர்.
Related Tags :
Next Story