டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்


டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்
x
தினத்தந்தி 2 Dec 2020 11:30 PM GMT (Updated: 2 Dec 2020 7:26 PM GMT)

பட அதிபர்கள் அங்கம் வகிக்கும் ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு சில தயாரிப்பாளர்கள் இந்த சங்கத்தில் இருந்து பிரிந்து சென்று, ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கினார்கள்.

இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் 22-ந் தேதி, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. அதில், மறைந்த டைரக்டரும், தயாரிப்பாளருமான ராமநாராயணனின் மகன் முரளி ராமநாராயணன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட டைரக்டரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் தலைமையில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம்’ என்ற பெயரில் ஒரு புதிய சங்கம் உருவாகிறது. புதிய சங்கத்தில் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகிய இருவரும் செயலாளர்களாகவும், கே.ராஜன் பொருளாளராகவும் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய சங்கம் பற்றிய மற்ற விவரங்கள் வருகிற 5-ந் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுபற்றி டி.ராஜேந்தர் கூறும்போது, “சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஒரு தேர்தலில் முறைகேடு நடந்திருக்கக்கூடும். ஆனால், முறைகேடு மட்டுமே தேர்தலாக நடந்திருக்கக்கூடாது. எனவேதான் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்படுகிறது. நான் ஒரு ஜனநாயகவாதி. தயாரிப்பாளர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் பாடுபடுவேன்” என்றார்.

Next Story