கொரோனா அச்சம்: அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிக்கு பாதுகாப்பு
படப்பிடிப்பு அரங்கில் ரஜினியை கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே ஐதராபாத்தில் தொடங்கி 40 சதவீதம் காட்சிகளை முடித்தனர். கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரஜினியின் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால் தாமதம் செய்தனர். தற்போது அரசியலுக்கு வருவதை ரஜினி உறுதிப்படுத்தி ஜனவரியில் கட்சி பெயரை அறிவிக்க இருப்பதால் அதற்கு முன்பாக படப்பிடிப்பை முடிக்கும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாகி உள்ளனர். ரஜினிகாந்தும் ஒரு மாதத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விடுமாறு அறிவுறுத்தி உள்ளார். படப்பிடிப்பை வருகிற 15-ந்தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினிகாந்த் ஓரிரு நாட்களில் ஐதராபாத் புறப்படுகிறார். படப்பிடிப்பு அரங்கில் ரஜினியை கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். படப்பிடிப்பில் சமூக விலகலை கடைபிடித்தல், ரஜினியை தவிர மற்றவர்கள் முக கவசம் அணிதல். படப்பிடிப்பு அரங்கு வாசலில் கிரிமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளியாட்கள் அவரை நெருங்க அனுமதி இல்லை. ஒரு மாதம் ஐதராபாத்திலேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ரஜினி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்.
Related Tags :
Next Story