9 மாதங்களுக்கு பிறகு ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது


9 மாதங்களுக்கு பிறகு ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Dec 2020 11:30 PM GMT (Updated: 14 Dec 2020 7:50 PM GMT)

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர்.

கிராமத்து கதையம்சத்தில் தயாராகும் இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர். பின்னர் கொரோனாவால் படப்பிடிப்பு முடங்கியது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னால் பெரிய நடிகர்களின் படப்பிடிப்புகளை ஆரம்பித்தனர். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது. ரஜினிகாந்த் பாதுகாப்பை கருதி கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ரஜினி ஈடுபட இருப்பதால் அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடிக்கும்படி படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்தார். வேட்டி சட்டையில் மேக்கப்புடன் கிராமத்து தோற்றத்தில் இருக்கும் ரஜினிகாந்த் புகைப்படம் வெளியாகி வைரலாகிறது. கொரோனா முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பு நடக்கிறது.

Next Story