படப்பிடிப்பில் விபத்து; நடிகர் ஆர்யா காயம்
விஷால், சக்ரா படத்துக்கு பிறகு ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா வில்லனாக வருகிறார்.
விஷாலுக்கு இணையாக ஆர்யாவின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் பெரும்பகுதி காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன. தற்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். அங்கு விஷால், ஆர்யா சண்டை காட்சியை படமாக்கினர். இருவரும் டூப் நடிகர்கள் வைத்துக்கொள்ளாமல் நேரடியாக சண்டையிட்டு நடித்தனர். அப்போது தவறுதலாக ஆர்யா கையில் பலமாக அடிபட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். உடனடியாக ஆர்யாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு ஆர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்திலும் ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
Related Tags :
Next Story