கொரோனா தொற்றுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை மீது வழக்கு


கொரோனா தொற்றுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை மீது வழக்கு
x
தினத்தந்தி 17 March 2021 2:27 PM GMT (Updated: 17 March 2021 2:27 PM GMT)

கொரோனா தொற்றுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற இந்தி நடிகை கவுஹர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரபல இந்தி நடிகை கவுஹர் கான். இவர் டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்தி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மும்பையில் வசிக்கும் கவுஹர் கானுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் பங்கேற்றதாக புகார் கிளம்பியது. 

இதனால் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கவுஹர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மும்பை மாநகராட்சி கமிஷனர் விஷ்வாஸ் மோத் கூறும்போது, ‘கவுஹர் கான் மாநகராட்சி அதிகாரிகளிடம் வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன்’ என்று உறுதி அளித்து இருந்தார். 

ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் இதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவலாம் என்றும் புகார் வந்தது. வீட்டுக்கு சென்று அதிகாரிகள் பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்'' என்றார். பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்ததால்தான் படப்பிடிப்பில் பங்கேற்றார் என்று கவுஹர் கான் தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது.

Next Story