தேர்தல் முடிந்ததும் 65-வது படத்தில் நடிக்கும் விஜய்
தேர்தல் முடிந்ததும் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். மாஸ்டர் படத்துக்கு பிறகு நயன்தாராவின் கோலமாவு கோகிலா. சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கி பிரபலமான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது விஜய்க்கு 65-வது படம். கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை தேர்வு செய்துள்ளனர்.
படத்தில் இன்னொரு நாயகி இருப்பதாகவும் இரண்டாவது நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும், விஜய் அதில் பங்கேற்று நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் சில காட்சிகளை மட்டும் ரஷ்யாவில் எடுத்து விட்டு மீதி காட்சிகளை சென்னையில் ரஷ்ய அரங்கு அமைத்து படமாக்க முடிவு செய்துள்ளனர். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story